Wednesday, April 05, 2006

ஒரு துளியாய்

ஒற்றைச்
சபலத்தின்
ஓர வெடிப்பில்
விம்மிப்பரவும்
பெருவெளியில்
ஒரு துளியாய்

மூடிய
சிப்பியின்
முதுகில் வழியும்
நீர்த் தாரையாய்
நீளும்
கற்பங்களை
நிமிர்த்திக்
கழியும்
பிரயத்தனத்தில்

பகலும் இரவும்
பாதித்
தூக்கமும்
பசியுமான
விளங்கமுடியா
மர்மத்தின்
முடிச்சில்

காலடி தெரியா
கற்பத்தின்
இருட்டைப்போல்
காலக்
கணிதத்தின்
கழித்தலிலும்
கூட்டலிலும்

சுற்றிச் சுழலும்
புழுவைப்போல
நகர்ந்து போக
நீள்கிறது
வாழ்க்கை.

No comments: