Sunday, January 15, 2006

கோ.போ.து.கு

எழுத்தாளர் ஏகாம்பரத்துக்கு ஏக டென்ஷனாய் இருந்தது. அவனவன் எல்லாம் எழுதிக் கிழித்து ஏராளம் ஏராளமாய்ச் சம்பாதித்ததும் புத்தக வெளியீடு போக்கிலிப் போராட்டம் என்று பாவ்லா காட்டுவதும் கார் மோர் என்று பந்தா காட்டுவதும் டென்ஷனை ஏத்திக்கொண்டே இருந்தது.

போதாக்குறைக்கு மனைவி வேறு கீறிக் கிழித்து உப்புப் போட்டுக்கொண்டிருந்தாள். அருமை பெருமையாக வாசகக் கண்மணிகள் என்று யாராவது தேடிவந்து விட்டால் போயே போச்சுது. வார்த்தையாலேயே வகிர்ந்தெடுத்து விடுவாள்.

மனைவியின் வாயை அடைக்கவும் தன்னாலும் ஏதாவது எழுதிக்கிழிக்க முடியுமா என்ற சுய பச்சாதாபத்துடனும் இன்று ஏதாவது எழுதி தன் பெருமையை நிலை நாட்டிவிட வேண்டுமென்ற திண்ணத்துடன் உட்காந்தவர் தான். ஆச்சு ... ஐந்து மணி நேரம் ஓடிப் போனதுதான் மிச்சம். மனைவியும் ஒரு ந...... பார்வையுடன் தூங்கப் போய் ஒரு ரவுண்ட கனவும் கண்டு முடித்திருக்கலாம்.

எதை எழுதுவது என்பதையே இன்னும் தீர்மானிக்க முடியாதிருந்தது. எதை எழுத எடுத்தாலும் ய்ராவது உரிமைப் பிரச்சனை கிளப்பிக் கொண்டு வர சந்தர்ப்பம் இருந்தது. இருக்கின்ற பெயரையும் குழப்பிக் கொள்வதில் உள்ள சங்கடத்தையும் சரிவரப் புரிந்து கொண்டிருக்கின்றார்.

மனைவி வேறு எழுதிக்கிழிச்சாலும் என்று பயங்காட்டிக் கொண்டிருக்கின்றாள். எழுதிக் கிழிப்பதைப் பற்றி எழுதினால், அட நன்றாகத்தான் இருக்கின்றது. எழுதுக் கிழிப்பது என்றவுடன் எப்படி எழுத்தாளர் ஆவது என்பது பற்றியெல்லாம் எழுதப்போகின்றேன் என்று நினைத்துவிட்டீர்களாக்கும். அது தெரியாமல் தானே நநனே திண்டாடிக்கொண்டிருக்கின்றேன். நீங்க வேறு... எழுதியதைக் கிழித்து விட்டு என்ன செய்வோம். அது தாங்க அந்தக் குப்பைகளைப் பற்றித் தான் எழுதப் போகின்றேன். குப்பைகளைப் பர்றி எழுதுவதில் பல நன்மைகள் இருக்கின்றது. குப்பை எழுதியிருப்பதாக யாரும் வித்தியாசமாகக் குற்றம் சாட்ட முடியாது. பிடிக்கவில்லையென்றாலும் யாரும் கிழித்து குப்பையில் போட்டாலும் கவலை பெரிதாக இருக்கமுடியாது. இப்ப மட்டும் என்ன வாழுதாம் என்று நீங்கள் முணுமுணுப்பதும் எனக்குக் கேட்கின்றது.

சரி குப்பையைப் பற்றி எழுதுவது என்று தீர்மானித்தாகிவிட்டது. என்ன தலைப்பு வைப்பது. எழுதுவது குப்பையாக இருந்தாலும் பார்க்க - படிக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை- வேண்டுமென்று தூண்டுவது தலைப்புத் தானே. குப்பையாய் இருப்பதில் என்ன பெருமை இருக்கின்றது. குப்பையாக இருந்தாலும் மேலே போனால் தானே மதிப்பிருக்கின்றது. கோபுரத்தில் இருக்கும் போது கிடைக்கின்ற மதிப்பு குப்பையில் இருந்தால் கிடைக்குமா ? கோபுரத்திற்கு போகத் துடிக்கும் குப்பைகள். கோ. போ. து .கு இப்போது மேலே பாருங்கள்.

சரி தலைப்பும் வைத்தாகிவிட்டது. என்ன எழுதவேண்டுமென்றும் தீர்மானித்தாகி விட்டது. இனி குப்பைகளை மேலே அனுப்ப என்ன வேண்டும். காற்று ... அதுவும் சூறாவளியாகச் சுத்தியடிக்கும் காற்று.

சரி இப்படி ஆரம்பிப்போம். 'சூ ' வென்று சுழன்றடிக்கும் காற்று . அப்போ எங்கு பார்த்தாலும் குப்பைகள் .... குப்பைகள்.... பல வர்ண நிறங்களில் ...... பச்சை மஞ்சள் சிகப்பு..... காகிதக் குப்பைகள் ..... பிளாஸ்ரிக் குப்பைகள் ....மனிதக் குப்பைகள் ....... சீ இப்படிச் சொல்வது ஜனரஞ்சகமாய் இல்லை. நாளைக்கு ஜனரஞ்சக எழுத்தாளன் என்று பெயர் வரக் கூடிய சந்தர்ப்பத்தையும் எதற்காக கெடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக ஜனரஞ்சக எழுத்தாளன் அப்படியென்றால் என்ன என்று ஏடா கூடமாகக் கேள்விகள் எல்லாம் கேட்கக் கூடாது.

எங்கு பார்த்தாலும் குப்பைகள். குப்பைகள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன. நீங்கள் ஏதோ கேட்கவருவது விளங்குகின்றது. தயவு செய்து என்னைக் குழப்ப வேண்டாம். என்னவென்றாலும் எழுதி முடித்த பின் கேளுங்கள். குறுக்குக் கேள்வி கேட்டால் என் கற்பனை குலைந்து விடக் கூடிய அபாயமும் இருக்கின்றது. அதனால் என்ன வந்து விட்டது என்று இடக்கு முடக்காகக் கேள்விகள் கேட்காது நான் சொல்ல வருவதை மட்டும் கேளுங்கள். அப்போது தான் நல்ல வாசகப் பரம்பரை உருவாகும். அப்படி சொல்வது என்னவென்று கேட்கத் தோன்றினால் மீண்டும் இரண்டு வரிகளின் முன்னால் இருந்து வாசிக்கத் தொடங்குங்கள்.

குப்பைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தன. நாங்களும் காது கொடுத்துக் கேட்போம். காது கொடுத்துக் கேட்பது தான் நல்லது. யாருக்கென்று கேட்கக் கூடாது. யாருக்கு நல்லதோ அவர்களுக்கு. ஆகவே காது கொடுத்துக் கேட்போம். குப்பைகள் அந்தக் கோபுரத்தைச் சுத்திச் சுத்தி வருகின்றன. கோபுரத்தில் ஒட்டிக் கொள்ள பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன. எவரின் முதுகில் என்றாலும் ஏறிக் கொள்ளப் பார்க்கின்றன. கால்களுக்குக் கீழே இருப்பவர்களைப் பற்றிக் கவலையில்லை. அவர்களை ஏணியாக வைத்து ஏறிக்கொள்வதே முக்கியம். இப்போது ஏறிக் கொள்வது தான் முக்கியம். யாருடைய கையை என்றாலும் பற்றிக் கொள்ளலாம். கால் என்றாலும் காரியமில்லை. இழுத்து விழுத்தி விடலாம். கோபுரத்தின் உச்சியில் ஏற்படக்கூடிய இட நெருக்கடியைக் குறைக்கக் கூடும்.

குப்பைகளில் ஆண் பெண் குப்பைகள் எல்லாம் இருந்தன. இது வரை கேட்காத வார்த்தைகளில் எல்லாம் ஒன்றுக் கொன்று அர்ச்சித்துக் கொண்டன. சில சிரித்தன. சில அழுதன.. .... கூக்குரலிலும் ஒப்பாரியிலும் அழுதன. சில கெக்கட்டமிட்டுச் சிரித்தன.

குப்பைகளில் ஒன்று கீழேயிருந்த மக்களைப் பார்த்து 'உங்களை அந்த ஆண்டவனால் தான் காக்க முடியும் என்றது. ஒன்று " லஞ்சம் லஞ்சம் " என்று கூக்குரல் இட்டுக்கொண்டு சென்றது. குப்பைகள் விதவிதமாக உடுத்திக் கொண்டிருந்தன. மாறுகரை மாறு வேட்டி உடுத்துக் கொண்டிருந்தன. சில விதம் விதமான வர்ணங்களில் துண்டுகள் போட்டிருந்தன. அதிசயமாக சில கறுப்புக் கண்ணாடி போட்டுக் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தன.

பெண் குப்பைகளும் மிதந்து மிதந்து மேலே வந்தது. திடீரென்று 'அம்மா' என்று பரவசக் குரலும் எழுந்தது. குப்பைகள் திடீரென்று தெய்வங்களின் வடிவம் எடுத்தன. முகங்கள் மாறி கோர உருவம் எடுத்தன. இரண்டு பல்லும் கழுத்து மண்டையோடும் சூலாயுதமும் கொண்டு வலம் வந்தன. அகோரமாய்ச் சிரித்தன.

கோபுரத்தின் உச்சியில் ஆங்காங்கே சில குப்பைகள் ஒட்டியிருந்தன. காற்றில் மாறி மாறி குப்பைகள் இடம் பிடித்துக் கொண்டன. திடீரென்று காற்று பலமாக வீசியது. குப்பைகள் எல்லாம் வெறிபிடித்தது போல் பறந்து கொண்டிருந்தன.

திடீரென்று எல்லாம் அடங்கிப் போய் விட்டது. குப்பைகள் எல்லாம் குப்பை லாரியில் ஏற்றப்பட்டுக் கிடந்தது. திடீர் அமைதியில் திடுக்கிட்டு எழுந்தது சுற்றுமுற்றும் பார்த்தேன். தூங்கிப் போயிருந்தது தெரிந்தது. கண்ட கனவையே கதையாக எழுதி விடலாம். ஆனால் இப்போது தலைப்பில் திருப்தி இல்லாதது போல் தோன்றியது. தி.மு.க , ப. ம. க போல மூன்றெழுத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. மூன்றெழுத்துல் மூச்சிருப்பதுபோல மூன்றெழுத்தே நன்றாக இருக்கும்.

த. தே. மு என்று வைக்கலாம் என்று முடிவுக்கு வந்திருக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். த.தே.மு என்னவென்று என்னைக் கேட்க வேண்டாம். தமிழக தேர்தல் முடிவுகள் என்று நீங்கள் சொன்னால் நான் என்ன செய்ய முடியும்.

6 comments:

வசந்தன்(Vasanthan) said...

:-0

இளந்திரையன் said...

சொல்றதை விளக்கமாக சொல்லக்கூடாதா ? வசந்தன்

Anonymous said...

நன்றி இளந்திரையன்.

எனது கருத்துக்கு மதிப்பளித்து உங்கள்
தளத்தின் பெயரை மாற்றியதற்கு
நன்றிகள்.தொடர்ந்து எழுதுங்கள்.

இளந்திரையன் said...

உங்கள் வருகைக்கு நன்றி கரிகாலன்

வசந்தன்(Vasanthan) said...

//சொல்றதை விளக்கமாக சொல்லக்கூடாதா//

அடடாஅடடா!
ஒரு நகைக்குறிக்குள்ளால் நான் சொல்ல வந்த விசயத்தை அப்படியே கண்டுபிடித்துச் சொற்களில் எழுதிய உம்மை எப்படிப் பாராட்டினாலும் தகும்.
;-)

தங்ஸ் said...

Superb! Ezuthu nadai nanraaga irukirathu..