Friday, February 24, 2006

என்னை நானே

அச்சு இயந்திரத்தின் அழுத்தத்தில்
நச்சு மையின் வாசனையில்
என்னை நானே பார்க்கையில்
எண்ணம் தொலைத்து நிற்கின்றேன்

கருப்பையில் கவி உணர்ந்தவன்
கனவினில் தினவு சேர்த்தவனோ - இல்லை
கழனியில் ஏர் உழுதவன்
களைப்பினில் மலர்ந்து கொண்டவனோ

வாழ்க்கையில் இடறி விழுந்தவன்
வார்த்தையில் வடிவம் எடுத்தவனோ -இல்லை
தலையினில் சுடர் சூட்டியவன்
எச்சியினில் உமிழ்ந்து வழிந்தவனோ

பிய்த்துப் போட்ட யோனியில்
பிறந்த உதிரத் துளிகளோ - இல்லை
குதறிப் பறித்த வாழ்க்கையின்
குவிந்து போன துயரமோ

வார்த்தை நல் ஜாலங்களில்
வந்துதித்த குறைப் பிறப்போ -இல்லை
தத்துவத்துக்கு தலை கொடுத்தவன்
தயவில் வந்து தொலைத்தவனோ

யாரோ ஆயினும்,

என்னைப் படிக்கையில் உன்
எண்ணம் பொங்கி எழுவதுவும்
இறுக்கி மூடுகையில் உந்தன்
இமைகள் நனைந்து வழிவதுவும்

என்னை நானே கவிதை
என்றே சொல்லப் பெருமிதமே.

No comments: